Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சரியாக பணியாற்றாத ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு: ரயில்வே

ஜுலை 30, 2019 02:55

புதுடில்லி: ரயில்வே துறையில், சரியாக பணியாற்றாத ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பெரும்பாலான துறைகளில், சரியாக பணியாற்றாத அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கண்டறிந்து, அவர்களுக்கு, கட்டாய ஓய்வு அளிக்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது. இந்த விஷயத்தில், ரயில்வே துறையும், தன் அதிரடி நடவடிக்கையை துவங்கியுள்ளது.

இது குறித்து, ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: ரயில்வே அமைச்சகம் சார்பில், அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் ஒரு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தங்கள் மண்டலங்களில், 55 வயதை கடந்த மற்றும் 30 ஆண்டு பணி செய்து முடித்தவர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து அனுப்பும்படி கூறப்பட்டுள்ளது.

இவர்களது பணிப் பதிவேடு பற்றிய அனைத்து விபரங்களையும் அனுப்பும்படி, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பட்டியல்கள் கிடைத்ததும், அதில், சரியாக பணியாற்றாதவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து, அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விபரங்கள் அனைத்தையும், ஆகஸ்ட், 9க்குள் அனுப்பும்படி, மண்டல அலுவலகங்களுக்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது. சரியாக பணியாற்றாதவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைப்புச்செய்திகள்